• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவே நீயென் சொந்தமடி - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 18

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அந்த வருடத்துக்கான புது மாணவர்களால் கலை கட்டியிருந்தது. பல கனவுகளுடன் காலடி எடுத்துவைத்த மாணவர்கள் முகமெல்லாம் பூரிப்பாகப் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தனர் என்றால், அங்கே ஏற்கனவே மாணவர்களாக இருப்பவர்கள் அவர்களைக் கிண்டல் கேலியில் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தனர். எங்கும் சந்தோசம் எதிலும் சந்தோசம். உற்சாகம், துள்ளல் என்று இளமை ஊஞ்சலாடியது.

சிரிப்பும் சந்தோசமாய் பொழுது கரைந்துகொண்டிருக்க, அதில் எதிலுமே கலக்காமல் தன் வகுப்பை நோக்கி ஒரு வேகத்துடன் நடந்துகொண்டிருந்தாள் மருத்துவ பீடத்து மாணவி கவின்நிலா.

அவளுக்கு ஒரு முகத்தைக் காண வேண்டும்! கண்டே ஆக வேண்டும்! கண்டு தாகம் தீர்க்க வேண்டும்! உள்ளத்தின் உந்துதலில் உள்ளே விரைந்துகொண்டிருந்தாள். அவளை இனங்கண்டவர்கள் அப்போதும் ஓடிவந்து கைகொடுத்து வாழ்த்தினர்.

செயற்கையான புன்னகை ஒன்றை அவர்களுக்குப் பரிசளித்துவிட்டு தன் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தாள்.

அந்த வருடம் நடாத்தப்பட்ட உயர்தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் ரேங்க் எடுத்து, யாழ்பாணத்துக்கே பெருமையைப் பரிசாக்கியவள் அவள். மீண்டும் தலை நிமிர்ந்தது யாழ்ப்பாணம். ஊரே கொண்டாடியது. பெருமையில் பூரித்தனர் மக்கள்.

அவள் இதயமோ ஒரே ஒருவனின் வாழ்த்துக்காய் காத்துக் கிடந்தது. அவன் வாழ்த்தவேயில்லை. கண்ணோரம் கண்ணீர் துளிகள் கசிய மனதில் பாரத்தோடு அமைதியாகிப்போனாள். அவன் அருகில் இருந்திருந்தால் இந்த நாள் எத்தனை ஆனந்தமாய் கழிந்திருக்கும்?

ஒரு காலத்தில் அவளது இலட்சியம் அது. கனவு அது! ஆனால், அது நடந்தேறியபோதோ அந்தச் சந்தோசம் அவளை எட்டவே இல்லை. எல்லோரினதும் வாழ்த்துகளையும் ஒற்றைப் புன்னகையோடு கடந்தாள்.

துஷாந்தினியும் சசிரூபாவும் மருத்துவ பீடத்துக்கு தெரிவாகும் அளவுக்கு நல்ல பெறுபேறுகளைப் பெற்று சித்தி அடைந்திருந்தனர். சசிரூபா வீட்டினருக்கும் அவளுக்கும் பெரும் சந்தோசம். துஷாந்தினிக்கும் மருத்துவபீடம் கிடைக்கும் என்பதே சந்தோஷமாயிருந்தது. துஷ்யந்தனுக்கு அது மிகப்பெரிய அடிதான்.

துஷாந்தினி வரவில்லை என்பதைவிட முதல் மாணவியாக வந்து காட்டிய கவின்நிலாவின் திடமனது அவனை அசைத்துத்தான் பார்த்தது. தான் அத்தனை இடையூறுகளைக் கொடுத்தும் அவள் தடுமாறவில்லை என்பது அவனைக் குற்ற உணர்வில் தள்ளியது.

மெல்ல சத்தமே இல்லாமல் அப்படியே ஒதுங்கிக்கொண்டான். இனி போட்டியிடுவதற்கு என்ன இருக்கிறது? என்னோடு போட்டியிடும் இடத்தில் கூட நீயில்லை என்று காட்டிவிட்டாளே!

பயத்தோடு பார்த்த தங்கையைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டான். “கம்பஸ் கிடைச்சிருக்கு தானே? பிறகென்ன. அழுறதை விட்டுட்டு சந்தோசமா இரு.” என்ற தமையனின் மாற்றம் அவள் விழிகளைவிரிய வைத்தது. அதே நேரம் இந்த அண்ணாவை மிக மிகப் பிடித்தது.

இதெல்லாம் நடந்து முடிந்து ஒருசில மாதங்கள் கடந்திருந்தது. இதோ இன்றிலிருந்து யாழ் பல்கலையின் மருத்துவ பீடத்து மாணவி கவின்நிலா. ஆனாலும் மக்கள் அவளை மறக்கவில்லை. அடுத்தடுத்து பரீட்சை எழுதக் காத்திருந்தவர்களுக்கெல்லாம் அவள் பெயரே முன்னுதாரணமாகப் பரிந்துரை செய்யப்பட்டது. அவளிடம் எப்படிக் கற்றீர்கள் என்று தெரிந்துகொள்ள, சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள என்று மாணவர்கள் வரிசை கட்டினர். அவளோ அவர்கள் எல்லோரிடமிருந்தும் தள்ளி நின்றுகொண்டாள்.

இப்போதும் கண்டு கதைத்தவர்களிடமிருந்து கழன்றுகொண்டு வகுப்பை நோக்கி விரைந்தது அவள் கால்கள். வாசலுக்கு வந்ததுமே நடை நின்றுவிட கண்கள் வேகமாய்ச் சுழன்றன. யாரைத் தேடி வந்தாளோ அவள், அங்கே மூன்றாவது வரிசையில் சற்றே உள்ளாக துஷாந்தினியுடன் அமர்ந்திருந்தாள். ஓடிப்போய் கையிலிருந்த பொருட்களை அப்படியே மேசையில் வைத்துவிட்டு அவளை நெருக்கி அடித்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் கரத்தோடு தன் கரத்தை வெகு இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டாள். பிணைத்துக்கொண்டதுமே விழிகள் நீரால் நிறைந்தன. இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

கோர்த்திருந்த கரத்தின்வழியே அவளின் அவனை உணரத் துடித்தது அவளிதயம். அந்தக் கரத்தினூடு அவளுக்குள் பாய்ந்த கதகதப்பில் அவனின் அருகாமையை உள்வாங்கிட முயன்றாள். அவள் அவளின் உயிரானவனின் தங்கை. ஆமாம்! இத்தனை நாட்களாய் தோழியாய் தெரிந்தவள் இப்போது அவனது தங்கையாகத்தான் தெரிந்தாள். அவனின் பிரிவை அவளின் அருகாமையில் ஆற்ற முயன்றாள். அவள் அவனோடு கூடப் பிறந்தவள். அவனின் இரத்தம். அவள் கண்கள் அவனைப் பார்த்திருக்கும் அல்லவா. அவள் விழிகளுக்குள் அவன் பிம்பத்தைத் தேடினாள். அவளின் சிரிப்பில் தன்னவனின் குறும்பைத் தேடினாள். எண்ணங்கள் அவனைத் தேடி ஓட, விழிகளோ கண்ணீரைக் காணிக்கையாக்கின.

இதனை எதிர்பார்க்கவில்லை சசிரூபா. சற்றுநேரம் அவளுக்கும் அதிர்ச்சிதான். அது விலக விலக உள்ளத்தில் ஆத்திரம் பொங்கத் துவங்க, அவளிடமிருந்து கரத்தினை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவள் விட மறுக்க, இவளின் விடுவிப்புப் போராட்டம் வலுப்பெற்றது.

“ப்ளீஸ்டி!” உதடுகள் நடுங்கச் சொன்னவளின் கலங்கி ரெத்தமென சிவந்திருந்த விழிகளைக் கண்டு இவள் போராட்டமும் முற்றுப் பெற்றது.

‘அண்ணாவை யாழ்ப்பாணத்தில இருந்தே துரத்திப்போட்டு எதுக்கு அழுகிறாள்?’ கோபம் கொழுந்துவிட்டு எரிந்தாலும் காட்ட முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டவளின் கண்களிலும் கண்ணீர்!

“என்னோட ஏனடி கதைக்கிறாய் இல்ல? நான் என்ன பிழை செய்தனான்? அவரும் இல்லாம நீயும் கதைக்காம..” கண்ணீர் உகுத்தபடி கேட்டவளின் வார்த்தைகளில் இவள் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டாலும் பதில் சொல்லவில்லை அவள்.

இத்தனை நாட்களாய் அவளோடு சசி கதைக்கவேயில்லை. படிக்கவும் ஸ்டடி ஹாலுக்கு வரவில்லை. டியூஷனில் சிலபஸ் எப்போதோ முடிந்தும் விட்டதால் வீட்டிலிருந்தே படித்தாள். பள்ளிகள் வேறுவேறு என்பதால் இருவரும் சந்தித்தே மாதக்கணக்காயிருந்தன.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒருநாள் அவளின் அண்ணா, “இனி கொழும்பிலேயே தொழில் செய்யப்போறன்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அஜந்தன் இங்கிருந்த கடையை பொறுப்பெடுத்துக்கொண்டான். கொழும்பிலிருந்தே தொலைபேசி வழியே, “தொழில் துவங்கக் காசு வேணுமப்பா.” என்று கேட்டு, வீட்டின் பெயரில் பழையபடி கடன் வாங்கியபோது, எதற்கும் தூணாய் நின்று அந்தக் குடும்பத்தையே காக்கும் மாயில்வாகணமே கலங்கிப்போனார் என்கையில் அவளின் நிலை? அவள் அம்மாவின் நிலை?

ஏன் எதற்கு என்று எவ்வளவோ கேட்டும் அசையவில்லை அவன். “இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாத தம்பி. எங்களுக்கு இதே போதும்.” என்று சொல்லியும் கேட்டானில்லை. அம்மா அழுது கரைந்தபோதும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. கடைசியாக, சசி தனியாக அழைத்து, “என்ன எண்டு சொல்லு. அம்மா அப்பாக்கு சொல்லமாட்டன். இல்லையோ கவிட்டையே நேராப்போய் கேப்பன்!” என்று மிரட்டவும் தான் விஷயத்தை மேலோட்டமாகச் சொன்னான்.

“அவர் நினைக்கிறதும் சரிதானே. அவளின்ர கெட்டித்தனத்துக்கு எங்கேயோ போவாள் நிலா. அப்ப நானும் கொஞ்சமாவது நல்ல இடத்தில இருந்தாத்தானே அவளுக்கும் மரியாதை.”

“ஏன் இப்ப உனக்கு என்ன குறையாம்? உன்ன மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க அவே குடுத்து வச்சிருக்கோணும் அண்ணா.” அவனின் விளக்கத்தை அவள் ஏற்றுக்கொள்வதாகவே இல்லை.

“அதுக்காக அப்படியே இருக்கவும் ஏலாது தானே. நாங்களும் முன்னேறத்தானே வேணும். அவள் படிக்கிற காலத்தில நான் கொஞ்சம் முன்னேறப் பாக்கிறது தானே புத்திசாலித்தனம்.” என்றான் தமையன்.

எல்லாம் சரிதான். அதற்காக கொழும்புக்கே ஓடுவானா? பெரிதாக என்னவோ நடந்திருக்கிறது. ஓரளவுக்கு ஊகிக்கவும் முடிந்தது அவளால். அவளின் தமையனிடம் யாராவது குறை என்று ஒன்றைச் சொல்வதானால் அது அவன் கல்வி பற்றியதாக மட்டுமே இருக்க முடியும்.

அதைச் சொல்லித்தான் அண்ணாவை துரத்தினார்களா? அழுகையே வந்துவிட்டது அவளுக்கு.

கொழும்பில் ஒரு இரவு கூடத் தங்க மறுப்பவன். ‘மனுஷன் நிப்பானா அங்க!’ கொழும்பு போய்வரும் ஒவ்வொரு முறையும் அவன் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. அப்படியானவன் கொழும்பிலேயே தங்கிவிட்டான் என்றால்.. நடந்தவையின் ஆழம் புரியாமல் போகாதே.

“என்னட்ட இருக்கிற நகை நட்டெல்லாம் வித்து எண்டாலும் தொழிலை துவங்கு அண்ணா. அவையளவுக்கு இல்லைதான் எண்டாலும் நாங்க ஒண்டும் யாருக்கும் குறைஞ்ச மனுஷர் இல்ல. நீ முன்னுக்கு வந்து அவளைத்தான் கட்டவேணும். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறார் டீன்?” அழுதழுது படபடத்தாள் சசிரூபா.

“அதெல்லாம் தேவையில்லை. சும்மா தொட்டத்துக்கும் அழாத எண்டு எத்தனை தரம் சொல்லுறது?” என்று அதட்டினான் செந்தூரன்.

“நான் ஒண்டும் அழ இல்ல!”

தங்கையின் கோபத்தை ரசித்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“உன்ர டீன் அப்படி இப்படி எண்டு நீதானே தலைல தூக்கி வச்சுக் கொண்டாடுவ. இப்ப அவரையே திட்டுறாய்?” என்றான் கேலிக்குரலில்.

“இனியும் கொண்டாடுவன்தான். யாழ்பாணத்துக்கே கிடைச்ச சொத்து அவர். எப்படா அவரின்ர ஸ்டுடென்ட்டா போவன் எண்டுதான் இப்பவும் பாத்துக்கொண்டு இருக்கிறன். அதுக்காக என்ர அண்ணாவை எப்படியும் கதைக்கலாமா அவர்?” அவனிடமே நியாயம் கேட்டாள் அவள்.

“ஆனா அண்ணா, அவரின்ர ஸ்டூடன்ட்டா வந்து, டாக்டராகி, படிக்காத செந்தூரன்ர தங்கச்சி நான் எண்டு அவருக்கே காட்டுறன் பார்!” என்று சவால் விட்டாள் அவள்.

“கட்டாயம் செய். அது எனக்கும் சந்தோசம். அதுக்கு நல்லா படி. யாரோடையும் கோபம் பாராட்டாத. எல்லாரோடையும் எப்பவும் போல பழகு.” என்று அவன் சொல்ல,

“எங்களுக்கு அதெல்லாம் தெரியும். நீ உன்ர வேலைய பார்!” என்றுவிட்டு பட்டென்று வைத்துவிட்டாள் அவள்.

பெரும் கோபம் வந்தது. தமையன் எதற்காக அல்லது யாருக்காகச் சொன்னான் என்று தெரியாதா? ஆனாலும், அண்ணாவை யாழில் இருந்தே விரட்டக் காரணமாணவளின் மீது கோபம் பொங்கியது. அவளாவது போகவிடாமல் மறித்து இருக்க வேண்டாமா? ‘என்ர அண்ணா உன்ர மாமாக்கு வேண்டாம் எண்டா நீ எனக்கு வேண்டாம்!’

இது எதுவும் அறியாத கவின்நிலா சசியையும் காணவில்லை என்றதும் தவித்துப்போனாள். அவளைப் பார்த்தாலாவது சற்று ஆறுதலாய் இருக்கும் என்றெண்ணி அழைக்க, எடுத்ததுமே, “என்ன?” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

சட்டென்று பொங்கிக்கொண்டு வந்தது அழுகை. “ஏனடி படிக்க வரேல்ல?” தழுதழுத்த குரலில் கேட்டாள்.

“நான் என்ர வீட்டுல இருந்தே படிக்கிறன். நீயும் உன்ர மாமாட்டை கேட்டு நல்லா படி. அதுதான் அண்ணாவை யாழ்ப்பாணத்திலே இருந்தே துரத்தி விட்டாச்சே! இனி நிம்மதியா சந்தோசமா படி!” ஆத்திரத்தில் படபடத்தாள் சசி.

“கொழும்புக்கா? என்னடி சொல்லுறாய்?” அவள் வாழும் இந்த ஊரில்தான் இருப்பான். எப்போதாவது எதேர்ச்சையாகத்தன்னும் காண்பேனே என்கிற ஆறுதலைக்கூட அடித்து நொறுக்கியது சசியின் வார்த்தைகள்.

“போதுமடி நீயும் உன்ர நடிப்பும்! வை ஃபோனை!” என்றவள் அடித்து வைத்துவிட்டிருந்தாள்.

துடித்துப்போனாள் கவின்நிலா. அவளின் மென்மையான மனதுக்கு அடிமேல் அடி விழுந்தது. அத்தனை அடிகளிலும் அவள் உடைந்துமட்டும் போகவில்லை. இறுகிப்போனாள். தன்னை இன்னும் உறுதியாக்கிக்கொண்டாள். அவன் தன் போராட்டத்தை துவங்கிவிட்டான். சொன்னதை செயலாக்கத் தொடங்கிவிட்டான். அவளும் செயலாக்கவேண்டும்! கண்களை மூடிக் கண்ணீரை அடக்கிவிட்டு படிக்கத் துவங்கினாள்.

நடந்த விஷயங்கள் சுரேந்தரின் காதுக்கும் வந்து சேர்ந்திருந்தது. அதிர்ந்தே போனான். அவளுக்கும் அவன் மீது ஈர்ப்பு உருவாகியிருக்கும் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தான். எப்படி இன்னொருவரிடம் அவள் மனம் சாய்ந்தது? இழவு காத்த கிளியாகிப்போன தன் நிலை அவனுக்கே பரிதாபமாய் போயிற்று. மனதளவில் புண்பட்டுப் போயிருப்பாள் என்றறிந்து இதமாக நடக்க முயன்றான். ஆறுதலாய் கதைதான். தன்னாலான உதவிகளைப் படிப்பில் செய்ய முயன்றான். அப்போதாவது தன் மனம் அவளுக்குப் புரியாதா என்கிற ஆவல். அப்படியே காதல் என்றாலும் அதைத்தான் டீன் பிரித்துவிட்டாரே.

தன் வேதனையிலேயே உழன்றுகொண்டிருந்த கவின்நிலாவுக்கு இதெல்லாம் மெல்ல மெல்லத்தான் விளங்கியது. சினம்தான் வந்தது.

ஒற்றை நிமிடத்தில் இந்தத் துன்பத்தை அவளால் களைய முடியும். இங்கேயே வாருங்கள் என்று அவள் சொல்லும் ஒற்றை வார்த்தை போதும் அவன் ஓடி வந்திடுவான். தூரத்திலிருந்தாவது பார்த்துக்கொள்வாள். அதைச் செய்யாமல் ஒரு விரதம் போன்று அவர்கள் இருவரும் பிரிந்திருந்து போராட, அவளை ஒருவன் பரிதாபத் கண்கொண்டு நோக்குவதா?

செந்தூரனுக்குத் தெரிந்ததோ அடுத்த துஷ்யந்தனாய் சுரேந்தரை போட்டுத் தாக்கிவிடுவான்.

அன்றும் அவளிடம் வந்து கதைத்த சுரேந்தரிடம், “சுரேந்தர், தயவுசெய்து எப்பவும் போல இருங்கோ. பரிதாபமா பாக்கிறது, அனுசரணையா நடக்கிறது, பாசம் காட்டுறது எல்லாம் வேண்டாம். அப்படி நீங்க நடக்கிற அளவுக்கு எனக்கு என்ன நடந்திட்டுது எண்டு நினைக்கிறீங்க?” சற்றுக் கோபமாகவே கேட்டுவிட்டாள்.

இப்படி நேரடியாகக் கேட்பவளிடம் என்ன சொல்வான்? உன்னை பிடித்திருக்கிறது என்றா? உன் காதலை உன் மாமா உடைத்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அதுதான் துணையாக நிற்கப் பார்க்கிறேன் என்றா?

“இல்லையே.. எப்பவும் போலதான்.”

“பொய் வேண்டாம் சுரேந்தர். எப்பவும் போல கதைக்கிறதா இருந்தா மட்டும் கதைங்க. இல்லாட்டி கதைக்காதீங்க. இனியும் உங்கட கண்ணில வேற எதையாவது பாத்தன், அதுதான் கடைசியா இருக்கும் நீங்களும் நானும் கதைக்கிறது.” உறுதியாகச் சொல்லிவிட்டுப் போனவளை சற்றே வியப்போடு பார்த்தான்.

அவனைவிடச் சின்னப்பெண். ஆனால், எவ்வளவு தெளிவாக ஒரு விஷயத்தைக் கையாள்கிறாள். அவன் மனதுக்கு இன்னுமே பிடித்த பெண்ணாக மாறினாள் அவள். அவளின் மனமாற்றத்துக்காக நம்பிக்கையோடு காத்திருக்கத் துவங்கினான். காயம்பட்டவளின் கோபத்தைப் பெரிதாக எடுக்கவில்லை. அவனுக்கும் அது கடைசி வருடம் என்பதால் நேரமும் இல்லாமல் போயிற்று. மனதில் மட்டும் மங்காத ஒரு ஆசை, எதிர்பார்ப்பு.

ஆனால், என்றுமே அவள் மனம் எதிலும் சலனப்பட்டதில்லை. பீடாதிபதிக்கு கூட அவள் மனதில் என்ன இருக்கிறது என்று இனங்காண முடியவில்லை. விழிகளால் அவளை ஆராய்ந்துகொண்டே இருந்தார். கல்வியில் எந்தப் பின்னடைவும் இல்லை என்பதில் ஆறுதல் கொண்டார்.

அவளுக்கு இரவுகளில் அவன் நினைவுகள் துணையாயின. அவனோடானா ஒரு தேநீர் கோப்பை அவளின் சந்தோசத்தை மீட்டுத் தந்துவிடாதா? தலையணைகள் கண்ணீரில் நனைந்தன. பகல்களை படிப்புக்கு பலிகொடுத்தாள். இன்றைய இந்த நாளுக்காக, சசிரூபாவை காணப்போகும் அந்தப் பொழுதுக்காக அவள் காத்திருந்த காத்திருப்பு மிகப்பெரியது. சசிரூபாதான் திண்டாடிப்போனாள்.

இவளும் வருவாள் என்று தெரியும். முகமே கொடுக்கக்கூடாது என்று எண்ணியிருக்க, கண்டவுடன் ஓடிவந்து கையை பற்றிக்கொண்டு இப்படி அழுவாள் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. அதோடு, கோபமிருந்தாலுமே நீண்ட நாட்களுக்குப் பிறகு கவின்நிலாவைக் கண்டதும் அவள் கண்களும் கலங்கிப் போயிற்று!

ஆனாலும், அவளோடு கதைக்கவே இல்லை சரூபா. அதனைப் பொருட் படுத்தவே இல்லை கவின்நிலா. என்னவோ அவள் முகத்தைப் பார்ப்பதே பாக்கியம் என்பதுபோல் பார்த்தாள். அவளை ஓட்டிக்கொண்டே தினமும் அமர்ந்தாள். அப்படி அமர்கையில், அவளைத் தொட்டுக்கொண்டு இருக்கையில் மனதில் ஒரு நிறைவு. ஒரு பாதுகாப்புணர்வு. அவன் அவளை விட்டு தூரப்போகவில்லை என்பது போன்றதொரு மாயை. தினமும் கோவில் திருநீறு கொண்டுவந்து அவள் நெற்றியில் இட்டுவிட்டாள். அதனை இடுகையில் அவள் விழிகளில் தென்படும் பாசத்தில் அசந்துபோவாள் சசிரூபா. என்னவிதமான நேசமிது?

ஆனால், இன்றுவரை, “ஒருக்கா வாண்ணா. வந்திட்டு போண்ணா” என்று எத்தனையோ முறை அழைத்து, கெஞ்சி, அழுதும் வராத தமையனின் கோபம் இவள் மீதே குவிந்ததால் முகத்தை திரும்புவதை நிறுத்தவில்லை அவளும்.

ஒருநாள் எழுந்து அடுத்த வரிசையில் சசி அமர்ந்துகொள்ள, இவளும் தன் பொருட்களை அள்ளிக்கொண்டு அவளருகில் சென்று அமர்ந்துகொண்டாள். சசி முறைக்க, “நீ எவ்வளவுதான் கோபப்பட்டாலும் உனக்கு பக்கத்துலதான் இருப்பன். நீ எங்கபோனாலும் பின்னால வருவன்.” என்றவளிடம் முறைத்துவிட்டு முகத்தை திருப்ப மட்டுமே முடிந்தது அவளால்.

நாட்கள் நகர்ந்தன. சசியிடம் எந்த மாற்றமும் இல்லை. உள்ளூர மட்டும், ‘அண்ணாவைப் பற்றி மட்டும் விசாரிக்கட்டும். குடுக்கிறன் கிழி.’ என்று காத்திருந்தாள். அவளோ அவன் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அது சசிக்குள் கோபத்தை மூட்டிவிட்டுக்கொண்டே இருந்தது.
 

Goms

Active member
கடவுளே எவ்வளவு வேதனை கவின்நிலாவுக்கு. சீக்கிரம் படிப்பு முடியட்டும்.
 
Top Bottom