• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 20

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 20


அவன் பாலகுமாரனின் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த அதே நேரத்தில் சக்திவேலர் ஆத்திரமும் அவசரமுமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கு உதவிக்கென்று இருந்தவரின் கையைக் கூட உதறிவிட்டு, ஊன்றுகோல் டொக் டொக் என்று தரையில் சத்தம் எழுப்ப வந்தவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

“டேய் பேரா! வாடா இஞ்ச!” என்றார் அவனைக் கண்டுவிட்டு.

அவன் போகவில்லை. முகத்தில் இறுக்கத்தோடு ஒரு கணம் நின்று அவரைப் பார்த்துவிட்டு, அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த அவனுடைய அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான்.

சக்திவேலரும் குடுகுடு என்று அங்கே போக முயன்றார். அவரைத் தடுத்து, “அப்பா கொஞ்சம் நிதானமா இருங்கோ. அவன் இப்ப கோவத்துல இருக்கிறான்.” என்ற பிரபாகரனின் பேச்சை அவர் கேட்கவில்லை.

“அவன் என்ன அவ்வளவு பெரிய மனுசனா? நான் கூப்பிட கூப்பிடக் கேக்காத மாதிரிப் போறான். நீயும் அவன் கோவமா இருக்கிறான் எண்டுறாய். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க ஆளாளுக்கு? நீ தள்ளு!” என்றுவிட்டு அவனுடைய அலுவலக அறைக்குள் வந்தார்.

அங்கே அவருக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்ற நிலனுக்குத் தன் ஊன்று கோளாலேயே ஒன்று போட்டார்.

“என்னடா திமிரா? நான் இல்லாம நீங்க எல்லாரும் வந்தனீங்களாடா? இந்தக் கிழவனுக்கு வயசு போயிட்டுது, இனியும் என்னத்துக்கு இவன் சொல்லுறதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கோணும் எண்டு நினைக்கிறியோ?” என்றவரின் வார்த்தைகள் அவன் நெஞ்சைத் தைத்தன.

திரும்பி அவரைப் பார்த்தான். எப்போதும் காலையில் எழுந்ததும் நல்லூரானைத் தொழுதுவிட்டு நெற்றியில் பட்டையாகத் திருநீறு பூசி, குளிர்ச்சியாகச் சந்தனப் பொட்டு நெற்றியை நிறைப்பதுபோல் வைத்துக்கொள்வார். இன்றும் அப்படித்தான் இருந்தார். கூடவே கண்கள் சிவந்து உக்கிர மூர்த்தியாகக் காட்சி தந்தார்.

பேசாமல் வந்து அவரைப் பிடிவாதமாக அழைத்துப்போய் அமர வைத்து, அருந்தக் கொடுத்தான். தண்ணீரை அருந்தி முடித்த பிறகு நெஞ்சை நீவி விட்டார். நிலனும் அவர் நெஞ்சை இதமாக நீவி விட, “கூப்பிட கூப்பிடக் கேக்காத மாதிரிப் போறாய் என்ன? அந்தளவுக்கு அப்பப்பா வேண்டாதவனா போய்ட்டன் உனக்கு.” என்றார், கோபமாக மனத்தாங்கலா என்று பிரிக்க முடியாமல்.

“சொறி அப்பப்பா!” என்றான் உடனேயே. என்னதான் அவர் மீது பெரும் கோபம் வந்தாலும் இந்த வயதில் இருக்கும் மனிதரை எப்படிக் கையாள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவன் மீது கோபத்தைக் காட்டினாலும் குழந்தையாகத் தெரிந்தார் மனிதர்.

“நீ கதைக்காத சொல்லிப்போட்டன். இப்ப என்னத்துக்கு குமாரை தனியா கூட்டிக்கொண்டு வந்து கதச்சனி? அவள் சொல்லி அப்பினவளா உனக்கு?” என்று ஆத்திரப்பட்டார்.

“அப்பப்பா சும்மா சும்மா அவளை இழுக்காதீங்க!” சட்டென்று மூண்டுவிட்ட கோபத்துடன் அதட்டினான்.

“அடி வெளுத்து விட்டுடுவன் ராஸ்கல்! உனக்கு அவளைச் சொன்னா கோவம் வருதோ?” என்றவரை இடையிட்டு,

“அவளும் உங்கட பேத்திதான் அப்பப்பா.” என்றான் வேதனையோடு.

“அப்பிடிச் சொல்லாத!” என்றார் அவர் உடனேயே. “அவள் எனக்குப் பேத்தியே இல்ல. அந்தத் தையல்நாயகின்ர பேத்தி எனக்குச் சொந்தமா இருக்கவே ஏலாது.”

அந்தளவில் அவள் செய்த தவறு என்ன? உள்ளே வலிக்க, “ஏன் அப்பப்பா இன்னுமே இப்பிடி இருக்கிறீங்க? அவளின்ர அம்மான்ர சாவுக்கு ஆர் காரணம்? அவள் அம்மா அப்பா இல்லாம இருக்கிறதுக்கு ஆர் காரணம்? எல்லாம் தெரிஞ்சும் தையல்நாயகில அந்த அம்மான்ர படத்தை எடுத்துப்போட்டு உங்கட ஃபோட்டோவை வைக்கிற அளவுக்குப் போயிருக்கிறீங்களே. கொஞ்சம் கூடவா உங்களுக்கு உறுத்த இல்ல?” என்று வினவினான்.

“திரும்பவும் என்னட்ட அடி வாங்காத பேரா! இண்டைக்கு அவளின்ர அம்மா உயிரோட இல்ல. அப்பன் அவளுக்கு அப்பன் இல்ல. தேவை இல்லாம இந்தக் கதையை எல்லாம் திரும்ப ஆரம்பிச்சு, என்ர மகளின்ர வாழ்க்கைல பிரச்சனைகளைக் கொண்டு வராத சொல்லிப்போட்டன். இன்னும் சொல்லப்போனா என்ர பிள்ளைக்கும் சேர்த்துத் துரோகம் செய்தவன் உன்ர மாமன். ஆனாலும் என்ர பிள்ளைக்காகத்தான் அவனை விட்டு வச்சிருக்கிறன். ஆனா நீ, எவளோ ஒருத்திக்காக என்ர பிள்ளையின்ர குடும்ப நிம்மதியப் பறிக்கப் பாக்கிறாய் என்ன?” என்றவரை வேதனையோடு பார்த்தான்.

இவ்வளவையும் பேசியதற்கே அவருக்கு மூச்சிரைத்தது. அந்த மனிதரிடம் அவனால் கோபப்படக்கூட முடியவில்லை.

ஆனால், இவருக்கு இன்னுமே இளவஞ்சியைப் புரியவில்லை என்றே தோன்றிற்று. அவர் வீட்டின் நிம்மதி இனி அவர்கள் யாரினதும் கையில் இல்லை. அதைச் சொல்ல முடியாமல் ஒரு நெடிய மூச்சுடன் எழுந்துகொண்டான்.

தன் தகப்பனிடம் அவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே வந்து இளவஞ்சிக்கு அழைத்தான். அப்போதும் அவள் கைப்பேசியில் இவன் இலக்கம் தடையில்தான் இருந்தது. சுர்ரென்று கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு பாலகுமாரனைப் போய்ப் பார்த்தான்.

அங்கே அவர் அமர்ந்திருந்த இருக்கையிலேயே சாய்ந்து விழிகளை மூடியிருந்தார். பயந்துவிட்டான் நிலன்.

“மாமா, என்ன செய்யுது? உடம்புக்கு ஏதும் ஏலாம இருக்கா?” என்றபடி அவரை வேகமாக நெருங்கினான். அவர் மீது நெஞ்சுள் வெறுப்பு மண்டிக்கிடந்த போதிலும் எப்படியாவது போகட்டும் என்று விடமுடியவில்லை.

அதற்குப் பதில் சொல்லாதவர் விழிகளைத் திறந்து அவனையே பார்த்தார். அவர் விழிகள் மீண்டும் கலங்கிக்கொண்டு வந்தன. அருகில் வந்தவனின் கையைப் பற்றி, “இந்தப் பாவித் தகப்பன் மன்னிப்புக் கேட்டவனாம் எண்டு சொல்லிவிடய்யா.” என்றார் கண்ணீர்க் குரலில்.

இப்போதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவர் தயாராயில்லை. அதை அவள் ஏற்கப்போவதில்லை. அது வேறு. அவளிடம் தன்னும் வந்து பேச அவர் தயாராக இல்லையே. வருத்த முறுவல் ஒன்றை மட்டும் சிந்திவிட்டு, அவரையும் சக்திவேலரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.

அங்கே ஜானகி இவனைக் கண்டதும் இளவஞ்சியைத்தான் விசாரித்தார்.

காலையில் ஒன்றாகப் போய்விட்டு அவன் மட்டும் திரும்பி வந்தது அவரைக் கேட்க வைத்தது.

“அவள் தையல்நாயகிக்கு போய்ட்டாள் அத்த.”

“அவள் ஏன் போனவள்? இனி அது மிதுனுக்கும் சுவாதிக்கும் எண்டு குடுத்தாச்சே.” என்றார் உடனேயே.

“இல்ல, அவளும் தையல்நாயகி அம்மான்ர பேத்திதான் அத்த.” அடுத்த பிரளயத்தைக் கிளப்பப் போகிறார் என்று தெரிந்தே சொன்னான். மறைக்கிற விடயமும் இல்லையே.

“என்னடா நேரத்துக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறீங்க? அவளுக்கு அந்தச் சொத்தில பங்கு இல்லை எண்டுதானே நானும் இந்தக் கலியாணத்துக்குப் பேசாம இருந்தனான். இப்ப அவளுக்கும் உரிமை இருக்கு எண்டா என்ன அர்த்தம்? சுவாதிக்கு ஒண்டும் இல்லையா?” என்று படபடத்தார்.

ஆக இவர் இந்தத் திருமணத்தில் இப்படி ஒரு திட்டம் போட்டிருந்தாரா? அன்று அவர்களின் மொத்தச் சொத்தில் நான்கில் மூன்று பங்கு மிதுனுக்குச் சொந்தம் என்றார். இன்று தையல்நாயகி.

நிலனுக்கு ஆயாசமாக இருந்தது. இது அவன் பிறந்து வளர்ந்த வீடு. இங்கிருக்கும் அனைவரும் அவனைத் தூக்கி வளர்த்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாகத் தெரியும் என்று இத்தனை நாள்களும் நினைத்திருந்திருக்கிறான்.

ஆனால் இன்றைக்கு அவர்களின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறான். மனிதர்கள் இத்தனை பொல்லாதவர்களா என்கிற அதிர்ச்சியும் அவனைச் சாய்க்கப் பார்த்தது.

“அத்த அவள் தையல்நாயகி அம்மான்ர பேத்தி இல்லை எண்டு இருந்தாலுமே தையல்நாயகி அவளுக்கு மட்டும்தான் சொந்தம். தையல்நாயகி அம்மா தையல்நாயகிய முழுசா அவளின்ர பெயர்லதான் எழுதி இருக்கிறா. அது தெரியாம நீங்களா ஒரு கற்பனைய வளக்காதீங்க.” என்றதும் இன்னுமே துள்ளினார் ஜானகி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னடா நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க எல்லாரும்? எல்லாத்தையும் நீங்களே நடத்தி முடிச்சுப்போட்டுத்தான் வந்து சொல்லுவீங்களா? அவளுக்குத்தான் எல்லாம் எண்டா அந்த வீட்டில போய்ப் பொம்பிளை எடுத்த என்ர மகன்ர நிலை என்ன? என்ன அப்பா நீங்களும் பேசாம இருக்கிறீங்க? என்ர மகன்ர வாழ்க்கைல எல்லாருமாச் சேந்து விளையாடுறீங்களா?”என்று ஒரு கத்துக் கத்தித் தீர்த்தார்.

அவள் வாசவியின் மகள் என்று அறிந்து அதற்கும் சத்தம் போட்டார். “தகப்பன் ஆராம்? இல்ல ஆர் எண்டு தெரியாம வயித்தில வாங்கினவளாமா அவளின்ர அம்மா? இந்தக் கேவலத்தையே பரம்பரை பரம்பரையா செய்றாளவே போல…” அதற்குமேல் அவர் பேசுவதை எல்லாம் கேட்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே வந்திருந்தான் நிலன்.

அவனுக்குக் கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. அதை யார் மீது காட்டுவது என்றுதான் தெரியவில்லை. காரை எடுத்துக்கொண்டு திரும்பவும் சக்திவேலுக்கே வந்து வேலையில் தன்னைப் புகுத்த முயன்றான்.


*****

எத்தனையோ நாள்களுக்குப் பிறகு அவளே எதிர்பாரா கணத்தில் தையல்நாயகிக்குத் திரும்பவும் வந்திருந்தாள் இளவஞ்சி.

வீடு திரும்பிய உணர்வு வந்த அதே நேரத்தில் தையல்நாயகியின் தற்போதைய நிலை என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை.

அனைத்துப் பிரிவுத் தலைவர்களையும், முக்கிய பொறுப்பில் இருப்பவர்களையும் அழைத்துப் பேசினாள். அவள் இல்லாத இந்த இடைப்பட்ட நாள்களில் நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். முக்கியமாகச் சக்திவேலர் இங்கே வந்து என்ன குழப்பங்களை விளைவித்தார் என்பதை ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் விரிவாகவும் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

அவர் அறிய முயன்றது முழுக்க முழுக்க அவள் மூலப் பொருள்களை எங்கிருந்து தருவிக்கிறாள், எப்படி உற்பத்திகளைக் கையாள்கிறாள், அவளின் உத்திகள் என்ன, அவளின் வெளிநாட்டு ஆர்டர்கள் என்ன, மாத லாபம் என்ன போன்றவைதான்.

கேட்டறிந்துகொண்டவளுக்கு கோபச் சிரிப்புத்தான் உண்டாயிற்று. அவளின் அடி மடியிலேயே கை வைக்கப் பார்த்திருக்கிறார். அவள் என்ன அந்தளவில் ஏமாளியா, அல்லது தையல்நாயகியின் தயாரிப்பு அவ்வளவு இலகுவாகச் சோடை போய்விடுமா?

அவர் கேட்டவை எல்லாம் அவளின் பிரத்தியேகமான மடிக்கணணியில்தான் புதைந்துகிடந்தன. சுவாதி மிதுனிடம் தையல்நாயகியை ஒப்படைத்துவிட்டுப் போனாலும் அவர்களைப் பற்றி அவளுக்குத் தெரியுமே.

எப்படிக் கொண்டு போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் அதையெல்லாம் வெளியில் விடுவாளா? ஆடை உற்பத்தி என்பது இன்று தயாரித்து நாளை கொடுப்பதன்று. அதில் அவள் எடுத்த ஆர்டர்களே அடுத்த மூன்று மாதத்திற்கு இருந்தன. அதேபோல்தான் மூலப்பொருள்களும்.

அந்த மூன்று மாதங்கள்தான் அவள் சின்னவர்களுக்கு வைத்தருந்த கெடுவும். சுவாதியாகக் கேட்டுக்கொண்டு வரட்டும், அதன் பிறகு என்ன செய்வது என்று பார்க்கலாம் என்று எண்ணியிருந்தாள்.

அன்றைக்கு அவள் வேறு வேலைகள் எதுவும் பார்க்கவில்லை. ஒருமுறை தையல்நாயகியை முழுமையாகச் சுற்றி வந்து, குறைநிறைகளைக் கேட்டறிந்து, அவசரமாகச் செய்யவேண்டியவற்றைக் குறிப்பெடுத்து என்று முழுமையாகத் தையல்நாயகியைத் திரும்பவும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே அந்த நாள் போயிற்று.

உடலளவில், மனத்தளவில், மூளையால் என்று மொத்தமாகக் களைத்துப்போயிருந்தாள். ஆனாலும் அடுத்த நாளிலிருந்து பார்க்க வேண்டிய வேலைகளை ஆனந்தியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

அப்போதுதான் நிலன் முறைப்புடன் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன கார் திறப்பு கண்ணில் பட்டது. சின்ன சிரிப்புடன் அதை எடுத்தாள்.

அவள் மீது கோபமாக இருந்த நேரத்திலும் அவன் அக்கறை பிடித்திருந்தது. அவளும் அவனைக் கட்டிக்கொண்டு அழுதாளே. கைப்பையையும் எடுத்துக்கொண்டு அவள் வெளியே வந்தபோது விசாகன் நின்றிருந்தான்.

இவளைக் கண்டுவிட்டு, “மேம்! நான் உங்களோடதான் இருப்பன்.” என்றுகொண்டு ஓடி வந்தான்.

“ஆர் உங்கள அனுப்பினது?” என்றாள் இறுக்கமான குரலில்.

அவன் அமைதியாக நிற்க, “ஆர் உங்களை அனுப்பினது எண்டு கேட்டனான் விசாகன்!” என்றாள் திரும்பவும் அழுத்தம் திருத்தமாக.

“நிலன் சேர்தான்.” என்றவன் வேகமாக நிலனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லிவிட்டு, அவளிடம் தன் கைப்பேசியை நீட்டினான்.

வாங்கி இவள் காதில் வைக்கவும், “வஞ்சி அவனோட போ!” என்றான் நிலன் அந்தப் பக்கத்திலிருந்து.

விசாகனின் செவியில் விழாத தூரம் வந்து, “போகாட்டி என்ன செய்வீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் இளவஞ்சி.

“எல்லாத்துக்கும் பிடிவாதம் பிடிக்கிறேல்ல. அதே மாதிரி எல்லா விசயமும் நீ நினைக்கிற மாதிரித்தான் நடக்கோணும் எண்டும் நிக்கிறேல்ல. எனக்கு உன்ர பாதுகாப்பு முக்கியம். நீ மண்டைக்க ஆயிரம் விசயத்த வச்சுக்கொண்டு காரை ஓட்டி ஏதாவது ஒண்டு நடந்தா நான் என்னடி செய்றது?” என்றான் அங்கே தனக்கு இருந்த சினத்தில் அவனும் எரிச்சலாக.

சட்டென்று அமைதியானாள் இளவஞ்சி.

“வஞ்சி?”

“ம்?”

“அவன் இனி உன்னோடதான் இருப்பான். இனி நான் இல்ல வேற ஆர் கேட்டாலும் மூச்சும் விடமாட்டான். இதத் தவிர வேற ஏதாவது விசயத்தில அவன் சரியில்லை எண்டா சொல்லு, வேற ஆள் பாப்பம். உனக்கு அவனில கோவம் இருந்தாலும் அவன் எண்டா கொஞ்சம் ஈஸியா இருப்பாய் எண்டுதான் அவனையே கூப்பிட்டனான். அதால திறப்பை அவனிட்டக் குடுத்திட்டுப் பேசாமப் போய் ஏறு போ!” என்று அவன் படபடவென்று பொறிய, “அங்க ஏதும் பிரச்சினையா?” என்றாள் இவள்.

சட்டென்று அமைதியானான் அவன். ஆனாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “இல்லையே. அப்பிடி ஒண்டும் இல்லையே. ஏன் கேக்கிறாய்?” என்று வினவினான்.

“என்ன பிரச்சினை எண்டு கேட்டனான் உங்களை?”

“ஒரு பிரச்சினையா ரெண்டு பிரச்சினையா உன்னட்டச் சொல்ல? எனக்கு இப்ப அவசரமா ரெண்டு பொம்பிளைப் பிள்ளை வேணும். பிறகு ஒரு ஆம்பிளைப் பிள்ளை. அவே மூண்டு பேருக்கும் பத்து வயதானதும் கடைசியா ஒரு பிள்ளை. நீ வேற சொந்தமா ஃபாக்ட்டரி வச்சிருக்கிறாய்.” என்றதும் சிரித்துவிடப் பார்த்தாள் இளவஞ்சி.

அன்றைய நாள் முழுக்க இருந்த அழுத்தம், கவலை, கண்ணீர் எல்லாமே நொடியில் காணாமல் போன உணர்வு. காலையிலும் உணவை ஊட்டிவிட்டானே. அவர்களுக்குள் இதமானதொரு சூழ்நிலை உருவாகுகையிலேயே என்னவெல்லாமோ நடந்துவிட்டது.

“எங்க நிக்கிறீங்க? வேல கூடவா?” என்றாள் தன்னை மீறி.

“இஞ்ச சக்திவேலிலதான். வேல அது நிறைஞ்சு கிடக்கு.”

வேலை அதிகம் என்றால் எத்தனைக்கு முடிக்கப் போகிறானாம் என்கிற கேள்வி உண்டானாலும், “சரி, நான் ஃபோன விசாகனிட்ட குடுக்கிறன்.”என்றாள்.

அவனுக்கு அவள் இப்போது எங்கே போகப்போகிறாள் என்று அறியத் தோன்றியது. ஆனாலும் கேட்கவில்லை. அவளாக எங்கே போகிறாள் என்று பார்க்கலாம் என்று முடிவு கட்டிக்கொண்டு, “முதல் வேலையா உன்ர ஃபோன்ல இருந்து என்னை ஃபிரீ பண்ணி விடு.” என்றுவிட்டு வைத்தான்.

விசாகனுடைய கைப்பேசியோடு சேர்த்து காரின் திறப்பையும் நீட்டினாள் இளவஞ்சி. சட்டென்று உணர்ச்சிப் பிழம்பாகிப்போனான் விசாகன்.

“உங்களுக்கு நினைவு இருக்கா தெரியா மேம். அப்ப தையல்நாயகி மேம் இருந்த நேரமும் உங்களிட்ட தந்துதான் கார் திறப்பை என்னட்டத் தர வச்சவா. ஆனா நான் அதுக்கு நியாயமா நடக்கேல்ல. இந்தமுறை அப்பிடி இருக்க மாட்டன் மேம்!” என்றான் கலங்கிவிட்ட விழிகளில் உறுதி தெறிக்க,

ஒன்றும் சொல்லாமல் காரின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டாள் இளவஞ்சி. அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாதபோதும் அப்படி அமர்ந்துகொண்டபோது எல்லாமே பழையபடி ஆகிவிட்டது போலொரு ஆசுவாசம்.

“மேம் எங்க விட?” காரை தையல்நாயகியிலிருந்து வெளியில் எடுத்தபடி வினவினான் விசாகன்.

“எங்க வீட்டுக்கு.” என்றாள் அவள்.



 
Last edited:
Top Bottom