• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சள்ளிப் போனவளே...! - நிதனிபிரபு

நிதனிபிரபு

Administrator
Staff member
ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல, மிக மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும் எதையும் பாராது அப்படியே நின்றிருந்தான். மனதில் உற்சாகமில்லை. உடலிலோ அது மருந்துக்கும் இல்லை. மகன் டெனிஷ் பள்ளிக்கூடம் சென்றிருந்தான்.

ஆபிஸ் போகவேண்டும் என்று மண்டைக்குள் மணியடித்தாலும் ‘அங்கே போயும் எதை செய்ய.. எப்பவும் பார்க்கிற அதே வேலைதானே..’ என்று சலிப்பாகவிருந்தது.

அவன் ஒன்றும் சோம்பேறி அல்ல! சொல்லப்போனால் மற்றவர்களை விடவும் போர்க்குணம் மிக்கவன்!

இலங்கைத் தமிழனுக்கு எல்லாமே போராட்டம் தானே! படிப்புக்கு போராட்டம், உழைப்புக்கு போராட்டம், பேசும் மொழிக்கு போராட்டம், வாழ ஒரு இடத்துக்கு போராட்டம், நிம்மதியான உறக்கத்துக்குக் கூட போராட்டம். இப்படி, போராடிப் போராடியே போராட்ட குணம் இரத்தத்தில் ஊறியது ஒவ்வொரு தமிழனுக்கும்!

அப்படித்தான் விக்ரமும்!

வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும்! மனைவியையும் மகனையும் நல்ல நிலையில் வாழ வைக்கவேண்டும் என்று எண்ணி, அல்லும்பகலும் போராடி உழைத்தான். ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கைபேசிகளுக்கு பணமேற்றும் தொழிலை சுயமாக ஆரம்பித்து, அதை பெருக்கி இன்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறான். ‘டெனிஷ் மொபைல்’ என்றால் எல்லோருக்கும் தெரியும், தரமானதும் நியாயமானதும் என்று. அவனது வளர்ச்சி இன்று அவனையும் மீறியது.

ஆனால், அந்த அசுரத்தனமான போராட்டமும், ஓட்டமும் அவனது உயிர்நாடியையே அவனிடமிருந்து பிடுங்கிவிட்டிருந்தது!

உழைப்பு உழைப்பு என்று பணத்தை தேடி ஓடியவன், தன் காதல் மனைவி, மகனை கவனித்துக்கொண்டு அவனோடு பின்வருவாள் என்று நினைக்க, அவளோ அவன் தலையில் இடியையே இறக்கிவிட்டாள்.

ஒருநாள் நள்ளிரவில் வீடு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினாள் யாஸ்மின். அவன் மனைவி! ஜெர்மனிய பெண்.

“என்னம்மா.. கொஞ்சம் தூங்கவிடு.”

“கீழே உங்களை பார்க்க ஒருவன் வந்திருக்கிறான்.”

“என்னை பார்க்கவா? யாரது?” புருவங்களை சுருக்கினான். என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும், தொழிலை வீடு வரை கொண்டு வருகிறவன் அல்ல அவன்.

தெரிந்தவராக அல்லது சொந்தக்காரராக இருந்தால் அவள் அறியாத நபர் என்று அவனுக்கு யாருமில்லை. “யாரது உனக்கு தெரியாமல்?” என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவப் போக, அவளோ பதில் சொல்லாமல் கீழே இறங்கி ஓடினாள்.

‘இவள் என்ன ஒன்றுமே சொல்லாமல் போகிறாள்?’ எண்ணம் ஓட, முகத்தை கழுவிக்கொண்டு வந்து ஒரு சட்டையை எடுத்து மாட்டியபடி கீழே இறங்கினான்.

ஒரு ஜெர்மனியன். அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இவன் கீழே செல்லவும் எழுந்து கைகொடுத்தான் அவன். அவனை அமரும்படி இருக்கையை காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டே மனைவியை கேள்வியாகப் பார்த்தான்.

அவளோ, இவனை பாராது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் பதட்டம். கைகளில் நடுக்கம்.

“நாம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறோமா?” முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.

“இல்லை. நான் யாஸ்மினின் தோழன்.” என்றான் அவன்.

‘தோழனா? இவள் ஏன் அதை சொல்லவில்லை?’ என்கிற யோசனையோடு மனைவியை பார்க்க, அவளோ இவன் கண்களை பாராது, “அவனை நான் காதலிக்கிறேன் விக்கி; உன்னை விவாகரத்து செய்துவிட்டு அவனை மணந்துகொள்ள போகிறேன்.” என்றாள்.

அதிர்ந்துபோய் மனைவியை பார்த்தான் விக்கி. சித்தம் கலங்குவது போலிருந்தது. பேச்சு மறக்க, மூச்சு அடங்க மனைவி சொன்னதை நம்ப முடியாமல் அவளை பார்த்தான்.

அவனுடைய காதல் மனைவி யாஸ்மின். அவள் இன்னொருவனை காதலிக்கிறாளா? பள்ளிப்பருவத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து, அவன் எடுத்த பாடத்தையே அவளும் எடுத்து அவன் சேர்ந்த கல்லூரிக்கே சேர்ந்து, அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டங்களிலும் கூட இருந்து, தாயும் தந்தையும் விபத்தில் இறந்தபோது அன்னையாக இருந்து அவனை காத்தவள் இன்னொருவனை காதலிக்கிறாளா?

அவனுக்கும் அவளுக்கும் எப்போது காதல் மலர்ந்தது என்று கேட்டால் அவனுக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது. ஒருவருக்கொருவர் நேசத்தை பரிமாறிக்கொண்டார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஒருவரை ஒருவர் மனதால் புரிந்துகொண்ட, தெரிந்து கொண்ட பந்தம் அவர்களது! அந்தளவு புரிந்துணர்வோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில் இயல்பாக பற்றிக்கொண்ட நேசம், திருமணம் என்கிற புனிதமான பந்தத்தை பூண்ட இத்தனை நாட்களில் கடிந்தொரு சொல் அவளை அவன் சொல்லியிருக்க மாட்டான்.

அப்படி அவன் சொல்லும்படி அவள் நடந்ததில்லை. அந்தளவுக்கு அவனை புரிந்துகொண்டு வாழ்ந்தவள் இன்னொருவனை தேடியோட என்ன காரணம்?

அதிர்ச்சி மெல்ல மெல்ல அடங்க அந்த இடத்தை கண்மண் தெரியாத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அந்த நேரம், “மிஸ்டர் விக்ரம்..” என்று அந்த அவன் ஆரம்பிக்க, கையை நீட்டி தடுத்தவனின் முகம் பாறையைபோல் இறுகிக்கிடந்தது.

ஆத்திரத்தை அடக்க நினைத்தவனின் கழுத்தோர நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுகின. கலவரமாக தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர் அந்த இருவரும்.

அந்தநொடியில் நொடிந்து போனது விக்ரமின் உள்ளம்! பிரத்யேகமான பார்வை பரிமாற்றங்களும், பரிபாஷைகளும் மனைவி என்கிறவள் கணவனோடு அல்லவோ நடத்த வேண்டும்!

இங்கே அவளுக்கு யார் கணவன்? மிக கேவலமாக உணர்ந்தான் தன் நிலையை!

“விக்கி.. நான் சொல்வதை கொஞ்சம்..” என்று ஆரம்பித்த யாஸ்மினை விக்ரமின் பொசுக்கும் பார்வை அடக்கியது.

அவனின் பக்கமாக திரும்பி, “நீ போகலாம்!” என்றான் விக்ரம்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
தயக்கத்தோடு எழுந்தவன் யாஸ்மினை பார்க்க, “உனக்கு நான் பிறகு அழைக்கிறேன் டிம்(Tim); நீ இப்போது போ..” என்றாள் அவள்.

அவன் எழுந்து நடக்க, அவனோடு தானும் வெளியே நடந்தாள் யாஸ்மின்.

சோஃபாவின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி கையால் நெற்றியை பற்றித் தேய்த்து விட்டுக்கொண்டே பார்வையை திருப்பியவனின் விழிகளில், டிம்மின் காரருகே நின்றிருந்த யாஸ்மினும் டிம்மும் பட்டனர்.

அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு யாஸ்மின் நின்றிருந்தாள்.

பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தை இவன் திருப்பப் போக, டிம்மின் தோளில் சாய்ந்துகொண்டாள் யாஸ்மின். அவனோ இவளை அணைத்துக்கொண்டு என்னவோ சொன்னான்.

அணைப்பதும் தோள் சாய்வதும் அவர்களுக்கு பெரிய விடயம் அல்லதான். ஆனால், யாஸ்மின் சற்றுமுன் சொன்ன விஷயத்தை அறிந்த பிறகும் அதை சாதாரணமாக அவனால் எடுக்க முடியவில்லை.

அவன் இரத்தம் கொதித்தது. அதைவிட மனைவியை காதலியாக அன்றுவரை நெஞ்சில் சுமந்தவனின் இதயம் தூள் தூளாக உடைந்தது.

வெறும் பயலாக இருந்த அவனை நெஞ்சில் கொண்ட நேசத்துக்காக மட்டுமே அன்று கரம் பிடித்தவளை, யாரும் எட்ட முடியாத உயர்ந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டானே! ஆசைப் பட்டது மட்டுமல்லாமல் அதை நிறை வேற்றியும் காட்டினானே!

அவள் ஆசைப்பட்டாள் என்று புத்தம் புதுக்கார். அவள் ஆசைப்பட்டாள் என்றுதான் இந்த வீட்டையும் கட்டினான். யாரோ அவர்களின் விருப்பத்துக்கு கட்டிய வீட்டை நாம் வாங்குவதா? நமக்கு பிடித்த விதமாக நாம் கட்டுவோம் என்று அவளின் ஆசைப்படி கட்டிய வீடு இது.

அவளின் பார்வை ஆசையோடு ஒரு பொருளின் மீது படிந்தால் அடுத்த நிமிடமே அதை வாங்கி கொடுத்துவிடுவானே..

பணமிருந்தால் எதுவும் செய்யலாம் தான். ஆனால் அவன் கொட்டிய நேசம்? காட்டிய காதல்?

தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களை அறிந்த ஜெர்மனியர்கள் கூட “உன் கணவன் நல்ல காதலன்” என்று சின்னப் பொறாமையோடு சொல்லும் இடத்தில் அவன் வாழவைக்க, அவளோ இன்னொருவனை தேடுவாளா?

மனம் உலைக்கலமென கொதித்துக்கொண்டிருந்தது.

அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு!

இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான்.

அவன் முன்னால் அவள் தயங்கி நிற்க, “உனக்கு எதில் குறை வைத்தேன் என்று இப்படி நடந்தாய் யாஸ்மின்? பணத்திலா, வசதியான வாழ்க்கையிலா? உன்மேல் வைத்திருக்கும் அன்பிலா? எதில் குறை வைத்தேன்?” கிட்டத்தட்ட கர்ஜித்தான்.

கணவனின் உக்கிரத்தில் அவள் தேகம் நடுங்கிற்று!

“இந்தக் காசும் பணமும் எனக்கு வேண்டும் என்று என்றாவது நான் சொன்னேனா விக்கி? எப்போதுமே வேலை வேலை என்று நீ போய்விட்டால் நான் யாரோடு கதைப்பது, சிரிப்பது, பேசுவது?”

“ஏன், அப்படி என்ன வருசக் கணக்கிலா உன்னைவிட்டுப் பிரிந்தேன்? எங்க போனாலும் கடைசியாக இங்கே தானே வந்தேன். நீயும் பிள்ளையும் தானே என் உலகமே. உலகம் பூரா சுத்தினாலும் என் உலகம் உன் காலடித்தானே. அது உனக்கும் தெரியும். பிறகும் ஏன்.. ஏன் இப்படியெல்லாம்.. என்னோட வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் எந்த இடத்திலையும் நீயில்லாமல் எதுவும் இல்லையே யாஸ்மின். இனி.. இனி மட்டும் எப்படி?” தொண்டை அடைத்தது அவனுக்கு.

“என்னை கொஞ்சம் விளங்கிக்கொள் விக்கி..” அவள் தவிப்போடு சொல்ல, அவனோ எரிமலையென வெடித்தான்.

“இனியும் உன்னை விளங்கி நான் என்ன செய்ய? என் பெண்டாட்டி பிள்ளையையும் நல்லபடியா பார்த்துக்கொண்டு எனக்காக காத்திருப்பாள் என்று நம்பித்தானே ஒவ்வொரு முறையும் இந்த வீட்டை விட்டு வெளியே போவேன். அந்த நம்பிக்கைக்கு நல்ல பதில் சொல்லிவிட்டாய். இனியும் உன்னை விளங்கிக்கொள்ள என்ன இருக்கு?”

அவனுக்கு தன் மனதை புரிய வைக்கவே முடியாது என்று தெரிந்துபோக, “நான் அவனை திருமணம் செய்யப்போகிறேன் விக்கி. எனக்கு விவாகரத்து வேண்டும்.” என்றாள் யாஸ்மின் முடிவாக.

தன் மனதை அறிந்தும், அதில் எவ்வளவு தூரத்துக்கு அவள் உயிரோட்டமாக கலந்திருக்கிறாள் என்று தெரிந்தும் அப்படிச் சொன்னவளை வெறித்தான்.

“நான் தரமறுத்தால்?”

“நீ என்னிடம் கேட்க மறுத்த விளக்கங்களை எல்லாம் கோர்ட்டில் சொல்லி விவாகரத்து வாங்குவேன்.”

முற்றிலுமாக உடைந்து போனான் விக்ரம். கோர்ட்டுக்கு போனால் இதையெல்லாம் பார்க்கும் மகனின் மனநிலை என்னாகும்?

அன்றுவரை அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தவன், அவளின் மனம் கோண நடக்காதவன் தன் மனதை கல்லாக்கிக்கொண்டு அதையும் கொடுத்தான்.

வேறு என்னதான் செய்வதும்?

அவனை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு, தனக்கான அடுத்த துணையாக இன்னொருவனை தேர்வும் செய்துவிட்டு, அவனை தன்னிடமே அவள் அறிமுகப் படுத்தியபோது அவனால் என்ன செய்துவிட முடியும்? அப்படி செய்தாலுமே அதில் ஏது பலன்?

காதலித்து கட்டிய கணவனை பற்றி அவள் சிந்திக்கவில்லை. பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் மூவரினதும் எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை.

அவளில்லாமல் அவனும் மகனும் என்னாவார்கள் என்றுகூட அவள் சிந்திக்கவே இல்லையே...

“மகன் என்னோடு இருக்கட்டும்.” என்று அவளின் முகம் பாராது அவன் சொன்னபோது, கலங்கிய விழிகளை மூடித்திறந்து சம்மதித்துவிட்டு அவனை பிரிந்து சென்றாள் யாஸ்மின்.

இதெல்லாம் நடந்து நான்கு வருடங்கள் ஓடியிருந்தன. இருபத்திநான்கு வயதில் நடந்த திருமணம். முப்பத்தியிரண்டு வயதில் முறிந்தே போயிற்று! ஆனாலும், அன்றைய நினைவுகள் இன்றும் மனதில் ரணமாய் கிடைக்க, கண்களை இறுக மூடிக்கொண்டு கிரேக்கச் சிற்பமென அப்படியே நின்றான் விக்ரம்! அன்று அவள் என்ன சொல்ல வந்தாள் என்பது இன்று அவள் சொல்லாமலே புரிந்தது அவனுக்கு.

முகம்பார்த்து சிரிக்க ஒருவரின்றி, மனதிலிருப்பதை கொட்ட ஒரு துணையின்றி, தலைசாய ஒரு மடியின்றி, சிகைகோத இரு கரங்களின்றி அவன் வாழ்க்கையே மரத்துப்போய் கிடந்தது.

டெனிஷ் இந்தக் காலத்துப் பிள்ளையாக, நண்பர்கள், வெளியே சுற்றுவது, வீட்டுக்கு வந்தால் கேம் விளையாடுவது என்று அவன் வாழ்க்கை பட்டாம்பூச்சியாக மிக மிக சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.

அப்போது அவனது கைபேசி அழைக்கவும், சலிப்புடன் பாக்கெட்டுக்குள் கையை விட்டு எடுத்து காதுக்கு கொடுத்து, “சொல்லுடா..” என்றான், அழைப்பது நண்பன் அசோக் என்றறிந்து.

“என்ன மச்சான்? ஏன் ஒருமாதிரி கதைக்கிறாய்?”

“தெரியேல்லடா… என்னவோ எல்லாமே மனம் விட்டுப்போன மாதிரி இருக்குடா...” எல்லையற்ற வலியும் விரக்தியும் அவனிடத்தில்.

விக்ரமை பற்றி முழுவதும் அறிந்தவன் அசோக். இன்னொரு திருமணம் செய்துகொள் என்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டான். கேட்ட பாடே இல்லை.

“தனிமை இவ்வளவு கொடுமையா இருக்கும் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை அசோக். சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப்போகுது. ஆறுதலுக்கு கூட பக்கத்தில ஒருத்தர் இல்ல மச்சான். இப்ப விளங்குது அவ ஏன் இன்னொரு வாழ்க்கையை தேடிப் போனா என்று..” சொல்லிக்கொண்டு போனவனுக்கு குரல் அடைத்துக்கொண்டது.

இன்று அவன் எப்படி தாயாக தாரமாக அவனை தாங்க ஒரு உயிரை தேடுகிறானோ, அன்று அவளும் அப்படித்தான் தன் அருகாமையை தேடி இருப்பாளோ என்று தோன்றவும், காலம் கடந்து உரைத்த உண்மையின் கசப்பை தாங்கமுடியாமல் நின்றான் விக்ரம்.

அசோக்குக்கும் பேச்சே வரவில்லை. இப்படியெல்லாம் மனதை தளர விடுகிறவன் அல்ல விக்ரம். அதோடு, எதையும் இலேசில் வெளியில் சொல்லவும் மாட்டான். அப்படியானவன் இப்படி புலம்புகிறான் என்றால்?

“இதுக்குத்தான் சொன்னேன் இன்னொரு..” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்துவிட்டு, இதை இப்போ கதைப்பது உசிதமல்ல என்றுணர்ந்து அதை நிறுத்தினான். “நேரமாகிவிட்டதே, ஆபிஸ்க்கு நீ வரவில்லையா என்று கேட்கத்தான் எடுத்தேன். இன்றைக்கு நீ வரவேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்.” என்றுவிட்டு செல்லை அணைத்தான் அசோக்.

விக்ரமுக்கு ஏனோ யாஸ்மினை பார்க்கவேண்டும் போலிருந்தது. அவள் எப்படியிருக்கிறாள், அவள் வாழ்க்கை எப்படிப் போகிறது, இப்போது எப்படியிருப்பாள் என்று தெரியவேண்டும் போலிருந்தது.

உடனேயே சொல்லாமல் கொள்ளாமல் அவள் வீட்டுக்கே போனான்.

இவனை கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின்.

அவளையே பார்த்து, “உள்ளே வரலாமா?” என்று கேட்டான் விக்ரம்.

“வாவா.. உள்ளே வா விக்கி..” என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின்.

“எப்படி இருக்கிறாய்? என்ன திடீரென்று வந்திருக்கிறாய்? டெனிஷ் எப்படி இருக்கிறான்?” என்று அவள் கேள்விகளை அடுக்க,

அன்றிலிருந்து இன்றுவரை இயல்பு மாறாமல், படபடக்கும் அவளை ஆராய்ந்தன அவன் விழிகள்.

தோளை தொட்டுக்கொண்டிருந்த முடியை ஆண்களை போன்று வெட்டி விட்டிருந்தாள். கன்ன உச்சி பிரித்து இழுத்திருந்தவளின் முடி, ஒற்றைப் பக்க புருவத்தில் வந்து மோத, அதை நளினமாக ஒதுக்கிவிட்டு, “என்ன குடிக்கிறாய் விக்கி? கபே தரட்டுமா?” என்று கேட்டாள்.

“ம்.. கொண்டுவா..”

அவள் சமையலறைக்குள் சென்றதும் வீட்டை ஆராய்ந்தான்.

பெரிய வசதி இல்லை என்பது பார்த்தாலே தெரிந்தது.

ஒரு குட்டி ஹால். தமிழ் எழுத்து டானா ஷேப்பில் அமைந்த சிறு சோபா. அதுவும் பழையது. அதற்கு முன்னால் சின்னதாக ஒரு டிவி. அவ்வளவுதான்.

சொல்லாமல் கொள்ளாமலே, அவள் ஆசைப்பட்டு வாங்கிய அவர்கள் வீட்டு சோபாவும், ஒருபக்கச் சுவரையே பிடித்திருந்த தொலைக்காட்சியும் மனக்கண்ணில் வந்தது.

அவள் கொண்டுவந்த கபேயை அருந்தியபடி, “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

“நானும் டிம்மும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம் விக்கி. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சாராவுக்கு ஒரு வயதுதான் ஆகிறது. அதனால் நான் வீட்டிலேயே இருந்து அவளை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.” என்று அவள் சொல்லும்போதே, “மம்மி..” என்றபடி கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்து வந்தது ஒரு குட்டி தேவதை..

தேவதையேதான்!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இவனை கண்டதும் விழிகளை உருட்டி இவனை பார்த்தாள். அவனும் அவளையே பார்க்க, உருண்டை கண்களில் குழப்பமும் பயமும் தோன்ற ரோஜா இதழ்கள் பிதுங்கத் தொடங்கியது. “சாரா, இங்கே வா..!” என்று அழைத்தாள் யாஸ்மின்.

தாயின் மடியில் அமர்ந்துகொண்டது குழந்தை. அவனால் அந்தக் குழந்தையிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. டெனிஷை சிறு வயதில் பார்த்தது போலவேயிருந்தாள்.

“நீ சந்தோசமாக இருக்கிறாயா யாஸ்...யாஸ்மின்..” என்றவனின் விழிகள், அவர்களின் வசதிக்குறைவை சுட்டுவது போல அந்த வீட்டை சுற்றிச் சுழன்றது.

அதைக் கவனித்துவிட்டு புன்னகைத்தாள் யாஸ்மின். “சந்தோசம் என்று நீ எதை நினைக்கிறாய் விக்கி? வீட்டில் இருக்கும் பொருட்களையும், காசையும், பணத்தையுமா? அது தப்பு விக்கி. மனதில் தான் இருக்கிறது சந்தோசமும் மகிழ்ச்சியும். அப்படிப் பார்த்தால் நானும் டிம்மும் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவனால் என்னை விட்டுவிட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது தெரியுமா? வருவாய் கொஞ்சம் குறைவுதான். அதனால் என்ன? என்றுமே பணத்துக்கு நான் ஆசைப்பட்டது இல்லை விக்கி. நானும் வேலைக்கு போனால் இன்னும் நன்றாக வாழலாம் தான். ஆனால், சாராவுக்கு மூன்று வயதாகி, அவள் கிண்டர் கார்டனுக்கு போனபிறகுதான் வேலைக்கு போவதாக இருக்கிறேன். காசு உழைப்பதை விட குழந்தையை வளர்ப்பது மிக முக்கியம் இல்லையா. அதனால், சில விசயங்களில் நானும் டிம்மும் மிக உறுதியாக இருக்கிறோம். சாரா வளர்ந்துவிட்டாள் என்றால், அதன்பிறகு அவளின் குழந்தை பருவத்தை நம்மால் அனுபவிக்கக் முடியுமா சொல்? அதேபோல்தான் இளமையும். இருக்கும்போது சந்தோசமாக வாழவேண்டும். அதை இழந்து கிடைக்கும் எதிலும் நிறைவும் இல்லை, திருப்தியும் இல்லை.”

அவள் சொல்வதை தலையசைத்துக் கேட்டுக்கொண்டான் விக்ரம்.

இன்று அவன் உணர்ந்ததை அன்று அவள் உணர்ந்திருக்கிறாள். அன்று அவளை தனிமையில் அவன் வாட விட்டிருக்கிறான். என் மனைவியை நெஞ்சில் சுமக்கிறேன், அவளை உயிராக நேசிக்கிறேன் என்று அவனாக அவனுக்குள் ஒரு கற்பிதம் வைத்திருந்திருக்கிறானே தவிர, அவளின் நிலையை உணர மறந்து விட்டிருந்தான்.

“நீ சொல்வது உண்மைதான் யாஸ். அதை அன்று நான் யோசிக்க மறந்துவிட்டேன் தான். என்னவோ.. உன்னையும் டெனிஷையும் நன்றாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு காசு வேண்டும் என்று நினைத்தேன். அப்போதெல்லாம் என் மனதில் பல கற்பனைகள்.. உன்னையும் அவனையும் கூட்டிக்கொண்டு உலகம் சுற்றவேண்டும், யாரும் வாழாத வாழ்க்கையை உனக்குக் கொடுக்க வேண்டும் என்று புறவாழ்க்கையை பற்றி யோசித்த நான் மனதை யோசிக்க மறந்துதான் போனேன்.” என்றான் அவன்..

அவள் விழிகள் லேசாகக் கலங்கியது. “நீ மிகவும் நல்லவன் விக்கி. என்னை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன். புரிந்துகொண்டாய். அது போதும் எனக்கு.”

“ஆனால் ஒன்றை மறந்துவிட்டாய் விக்கி. உன்னை காதலித்தபோதும், கைப்பிடித்தபோதும் நீ சாதாரண விக்கிதான். அந்த விக்கியை, ஏழ்மையில் அன்பை மட்டுமே என் மீது அள்ளியள்ளிக் கொட்டிய அந்த விக்கியைதான் நான் உயிராகக் காதலித்தேன். அதன்பிறகோ நீ காசின் பின்னால் ஓடத் தொடங்கிவிட்டாய். இளைப்பாற மட்டுமே என்னை நாடினாய். எனக்கோ நீ அருகிலிருந்து, உன் அன்னபை மட்டுமே தரவேண்டும் போலிருந்தது. என்றைக்குமே காசு பணத்துக்கு நான் ஆசைப்பட்டதில்லை.”

அன்று கேட்க மறுத்ததை இன்றாவது கேட்கிறானே என்கிற நிம்மதி அவளிடம்!

ஆனால் அவன் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை.

எங்கோ வெறித்துக்கொண்டு, “உன் மனதை நீயாவது சொல்லியிருக்கலாம் யாஸ். வேறொரு வாழ்க்கை தேடமுதல் என்னிடம் உன் மனதை, அதில் உள்ள விருப்பத்தை எல்லாம் ஏன் சொல்லத் தோன்றவில்லை உனக்கு?” என்று கேட்டான் அவன்.

பதிலின்றி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் யாஸ்மின். கணவன் அவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்து, மனதின் ஆசைகளையும் இளமையின் தேவைகளையும் அடக்கிக்கொண்டு தான் அவளும் வாழ்ந்தாள். அந்த நேரத்தில்தான் டிம்மின் நட்பு அவளுக்கு கிடைத்தது.

அவன் என்னவோ சாதாரண நண்பனாக தான் அறிமுகமானான். நாட்கள் செல்லச் செல்ல, அவனது அன்பும், நிதானமும், பழகும் விதமும் அவளை கவர்ந்து அவள் அறியாமலேயே அவள் மனதில் அவன் வந்திருந்தான். அதை அவள் உணர்ந்தபோதோ அவன் முற்றிலுமாக அவள் மனதை ஆக்கரமித்திருந்தான்.

பிறகு எங்கே கணவனிடம் அதைப் பற்றிக் கதைப்பது? அவன்தான் மனதுக்குள் வந்து விட்டிருந்தானே!

இதை எப்படி இப்போது அவனிடம் சொல்வது? ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறவனிடம்!

புதியவனை வேடிக்கை பார்த்து முடித்துவிட்ட சாரா, வீட்டுக்கு பின்னால் விளையாடப் போகவும், கபே கப்பை எடுத்துக்கொண்டு தானும் அவளோடு நடந்தான் விக்ரம். சின்னத் தோட்டம் வைத்திருந்தார்கள். நான்கு தக்காளி, நான்கு கத்தரி, கொஞ்சமாக காரட், மிளகாய் கன்று கூட ஒன்று நின்றது. அதை அவன் பார்க்கவும், “உன்னோடு வாழ்ந்த நாட்களில் பழகியது. எப்போதாவது மிளகாய் சாப்பிடுவேன்.” என்றாள் யாஸ்மின்.

“ஆமாம்மாம்! நீ எப்படிச் சாப்பிடுவாய் என்று எனக்கு தெரியாதா? ஒரு மிளகாயை நான்காக வெட்டி நான்கு நாட்களுக்கு வைத்து சாப்பிடுவாய்..” என்று சொல்லி வெண்பற்கள் தெரியச் சிரித்தான் விக்ரம்.

“விக்கி! கேலி செய்யாதே! நீ சாதாரணமாக நான்கு மிளகாயை ஒரே நேரத்தில் உள்ளே தள்ளுவாய். நான் டிம்மிடம் கூட சொல்லியிருக்கிறேன். அவன் வாயை பிளந்தான்.” என்று சொல்லி அவள் சிரிக்க, அந்த நாட்கள் மனக்கண்ணில் ஓட உள்ளே வலி எழுந்தது அவனுக்கு.



அவன் மிளகாயை சாப்பிடுவதை பார்த்து, “இது அவ்வளவு ருசியாகவா இருக்கும் விக்கி?” என்று கேட்டவளின் வாய்க்குள் அன்று அவன் ஒரு மிளகாயை திணித்ததும், விவகாரம் தெரியாமல் அவள் அதை சப்பியதும், உறைப்பு தாங்காமல் அவள் பட்ட பாடும், அதை தடுக்க அவன் வழங்கிய இதழ் முத்தமும் என்று அவன் நினைவுகள் அந்த நாட்களுக்கு ஓட மனமோ இழந்துவிட்ட சொர்க்கத்தை மீட்க வழியின்றிப் போனதில் துடித்துத் துவண்டது.

அன்று மட்டுமல்ல, அடுத்துவந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளை தன் குழந்தையை போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்.

அப்படி அவனோடு வாழ்ந்தவள் எப்படி இன்னொருவனை மனதில் நினைத்தாள்?

கேள்வி நெஞ்சில் எழ அவளை திரும்பிப் பார்த்தான். அவர்களின் குட்டித் தோட்டத்துக்கு, சேமித்து வைத்திருந்த மழைநீரை அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தாள் யாஸ்மின். அவளுக்கு பின்னால் தானும் தோட்டத்துக்கு நீர் விடுகிறேன் என்கிற பெயரில் தன்னை நனைத்துக் கொண்டிருந்தாள் சாரா.

இவன் பார்க்கவும், “என்ன பார்க்கிறாய் விக்கி?” என்று கேட்டாள் யாஸ்மின்.

மனதில் இருப்பதை சொல்ல முடியாமல், “இது சொந்த வீடா யாஸ்? தோட்டம் எல்லாம் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

“இல்லை.. வாடகை வீடுதான். ஆனால், உரிமையாளர் மிகவும் நல்லவர். அதனால் சொந்தவீடு மாதிரித்தான் நாங்கள் வாழ்கிறோம்.”

“வாழ்க்கை எப்படி போகிறது யாஸ்? நான் ஏதாவது உதவி செய்யவேண்டுமா? தயங்காமல் கேள், நிச்சயம் செய்வேன்.”

அவள் புருவங்களை சுருக்கவும், “எந்த தப்பான எண்ணத்திலும் இல்லை யாஸ். என்னிடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. அது உனக்கு தேவைப்பட்டால் அதில் எனக்கு மிகுந்த சந்தோசமே. அதனால் மட்டும் தான் கேட்டேன்.” என்றான் அவன்.

“எனக்கு உன்னை தெரியாதா விக்கி? ஆனால், மெய்யாகவே தேவை என்று எதுவுமே இல்லை விக்கி. என்மேல் உயிரையே வைத்திருக்கும் அன்பான கணவன். அழகான குட்டி சாரா. சின்ன வீடு, போதுமான சம்பாத்தியம், போதாக்குறைக்கு நம் மகன் டெனிஷ். இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு சொல்?”

அவளையே பார்த்தான் விக்ரம்.

என்னை தெரியும், என் மனதை தெரியும், என் எண்ணங்களை தெரியும், என்னைப்பற்றி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தவள் ஏனடி எனை விட்டுப் போனாய் என்று கத்தவேண்டும் போலிருந்தது.

அடக்கிக்கொண்டான்.

அவள் கட்டாயப்படுத்தி தந்த மதிய உணவையும் முடித்துக்கொண்டு அவன் விடைபெற்ற போது, மனதில் எந்தளவு தூரத்துக்கு வலி இருந்ததோ அந்தளவு தூரத்துக்கு மனம் நிறைந்திருந்தது.

அவன் நேசித்த பெண், அவளாவது சந்தோமாக வாழ்கிறாளே.

சாராவோ அதற்கிடையில் அவனோடு நன்றாக ஒட்டிவிட்டிருந்தாள். தன் மகனைப்போன்ற சாயலில், தான் நேசித்த பெண்ணின் வடிவில் இருந்த குழந்தையை இறக்கவே முடியவில்லை அவனால்.

அவனது முன்னாள் மனைவியின் இந்நாள் கணவனின் குழந்தை என்று தெரிந்தாலும் முடியவில்லை. பாசம் உள்ளே பொங்கிற்று!

“இவளை எனக்கே எனக்கென்று தந்துவிடேன் யாஸ். என்னால் இவளை விட்டுவிட்டு போக முடியும்போல் தோன்றவில்லை..” என்றான் கைகளில் இருந்தவளை இறக்க மனமற்று.

பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது யாஸ்மினின் கண்களில் இருந்து. “டெனிஷை பிரிந்து வாழ்வதையே என்னால் இன்றளவும் தாங்கிக்கொள்ள முடியவில்லை விக்கி. என்னதான் இருந்தாலும் உனக்கு நான் செய்தது பெரும் துரோகம். அப்படியிருக்க, அவனையும் உன்னிடமிருந்து பிரித்தால் நீ தாங்கமாட்டாய் என்றுதான் நீ கேட்டபோது அவனை உன்னிடமே விட்டுவிட்டு வந்தேன். இவளையும் தந்துவிட்டு என்னை என்ன செய்யச் சொல்கிறாய் விக்கி?” என்று அவள் கேட்டபோது, அவன் கண்களும் பனித்துவிட்டது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
சட்டென்று அங்கிருந்து நகர்ந்து வீதிக்கு வந்தான். சாரா வீதியை வேடிக்கை பார்க்க, அவன் நெஞ்சமோ பூகம்பத்தின் பிறப்பிடமாகிப்போனது.

தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ள பெரும் சிரமப்பட்டான் விக்ரம்.

தாயை தேடியோ என்னவோ அவன் தோளுக்கு பின்னால் பார்க்க முற்பட்ட சாராவின் செப்பு இதழ்கள் அதன்பாட்டுக்கு இவன் கன்னத்தை உரசிச் செல்ல, சிலிர்த்துப்போய் திரும்பி, பனித்த விழிகளால் அந்தக் குட்டியை பார்த்தான்.

அவள் தாயை தேடுவது கண்ணில் பட, உண்மை உறைக்க, நிகழ்காலமும் நினைவுக்கு வந்தது.

மனம் கனத்தாலும் யாஸ்மினின் சந்தோசமான வாழ்க்கை ஒருவித நிறைவைத்தான் கொடுத்தது அவனுக்கு.

சாராவை அவளிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றான்.

“விக்கி..” தயக்கத்தோடு அழைத்தாள் யாஸ்.

திரும்பி பார்த்தான் விக்ரம்.

“இனியாவது இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாமே..” மெல்லச் சொன்னாள்.

அவளையே பார்த்தான் விக்ரம். பெருமூச்சை இழுத்துவிட்டான். பின், “இனி யோசிக்கிறேன்..” என்றுவிட்டு காரிலேறிச் சென்றான்.

நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன.

தனிமையை போக்க தன்னை இன்னுமின்னும் வேலைக்குள் புதைத்துக்கொண்டான். மகனும் பார்த்துக்கொண்டிருக்க வளர்ந்துகொண்டு போனான்.

வளர்ந்துவிட்ட டெனிஷ்க்கும் பரந்துகிடக்கும் உலகத்தில் பல நண்பர்கள். வீடு தங்குவதே கிடையாது. இவனும் தொழில் தொழில் என்று தொழிலே கதியென்று கிடந்தான்.

அன்று அசோக், “ஒரு இடத்துக்கு போகலாம் வா.” என்று இவனை இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

அது ஒரு சிவப்பு விளக்குப் பகுதி!

அந்த இடத்தை பார்த்ததும், “என்னடா இங்கே வந்திருக்கிறாய்?“ என்று கேட்டான் விக்ரம்.

“ஆமாம். இங்கேதான். நீ போய்விட்டு வாடா.”

நண்பனை வியப்போடு திரும்பிப் பார்த்தான். “நான் நல்லவனாக இருப்பதில் உனக்கு என்னடா கஷ்டம்?” இலகுவாகவே கேட்டான்.

ஆனால் அவனோ தீவிரமாக இருந்தான். “இங்கே வருவதாலேயே நீ கெட்டவனாக முடியாது விக்கி. நீ என்றைக்குமே நல்லவன் தான். அதனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் போ.”

அதுவரை இருந்த இலகுத்தன்மை அகன்றது. “இந்த முடிவுக்கு ஏன் வந்தாய் அசோக்?”

“நீ படும் கஷ்டத்தை பார்த்துத்தான். அதோடு நானும் ஒரு ஆண் தானே விக்கி. உன் நிலை எனக்குப் புரியாதா? போ மச்சான்..” என்றான் அவன் தோளில் தட்டி.

“என்னடா என் நிலை?”

“மனைவி இல்லாமல் தனித்து வாழ்கிறாயே.. அன்று உன் மனதில் இருந்த கவலைகளை கொட்டினாயே. பிறகும் என்னடா?”

“உண்மைதான். பெண் துணை ஒன்று இருந்தால் எவ்வளவோ நல்லது என்று இப்போதும் நினைக்கிறேன் தான் அசோக். ஆனால், அது வெறும் உடல் தேவைக்காக மட்டுமில்லை. அதுவும் தேவைதான். ஆனால், முக்கியமாக மனதுக்கு தான்டா ஒரு துணை தேவையாக இருக்கிறது. என்னோடு கதைக்க, என்னோடு சேர்ந்து சிரிக்க, என்னோடு சேர்ந்து ஒரு கப் கஃபே குடிக்க, என்னோடு சேர்ந்து மாலையில் நடக்க, இரவில் தூங்கும்போது அருகில் துணையாக உறங்க, எனக்கு சமைத்துத் தர, என்னோடு சேர்ந்து சாப்பிட, என்னோடு சண்டை பிடிக்க, எனக்கு எதையாவது வாங்கித்தா என்று அடம்பிடிக்க, அவளுக்காக என்று ஒன்றை நான் செய்ய என்று இப்படி பலதுக்காக எனக்கு ஒரு துணை வேண்டும் தான். ஆனால், இதற்காக மட்டும் என்றால்.. நான் என்ன அவ்வளவு கேவலமானவனாடா” சின்னக் கோபம் எட்டிப்பார்த்தது அவன் பேச்சில்.

“லூசன் மாதிரி பேசாதே. உன்னை நானே அப்படிச் சொல்வேனா? நீ சொல்வது மாதிரி ஒரு துணை என்றால் அது மனைவியாகத்தான் இருக்க முடியும். உனக்கு ஒரு நல்ல பெண்ணை நானே பார்க்கிறேன். அது பிறகு, இன்றைக்கு நீ இங்கே போய்விட்டு வா..” என்றான் அசோக்.

“நோ மச்சான். இங்கே வருவதாக இருந்தால் நீ கூட்டிக்கொண்டு வரும்வரைக்கும் நான் காத்திருப்பானேன். என்றைக்கு யாஸ்மின் என்னை விட்டுப் போக காரணம் என்ன என்று நான் உணர்ந்தேனோ.. என்றைக்கு எனக்கு ஒரு துணை வேண்டும் என்று நான் யோசித்தேனோ அன்றைக்கு வந்திருப்பேன்டா.”

எதற்கும் வளைந்து கொடுக்காத நண்பனை முறைத்தான் அசோக்.

“எல்லாவற்றிலும் பிடிவாதம். ஆரம்பத்தில் யாஸ்மினை தான் கட்டுவேன் என்று பிடிவாதம். பிறகோ வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற பிடிவாதம். இன்றோ இதுக்கும் பிடிவாதம். இந்தப் பிடிவாதத்தால் எவ்வளவை பெற்றாயோ அதே அளவை இழந்தும் இருக்கிறாய்..” என்று சலித்தவன், “நாளைக்கே இலங்கை போகிறோம், உனக்கு பெண் பார்க்க.” என்றான் முடிவாக.

நேரெதிரே பார்வையை பதித்து சற்று யோசித்தான் விக்ரம். பிறகு, “நாளைக்கு முடியாது. வேலைகளை கொஞ்சம் ஒதுக்கிக்கொண்டு போகலாம்.” என்றான்.

“ஹேய்… சூப்பர்டா..” என்று அசோக் சந்தோசப்பட,

“அவளும் என்னை விட்டுப் போகாமல் இருந்தால் சரிதான்.” என்றான் சின்னச் சிரிப்போடு.

விரக்தி கலந்த அந்தச் சிரிப்பில் இருந்த வேதனையை உணர்ந்தான் அசோக். அவனுக்கு ஒரு நல்லதை செய்தே ஆகவேண்டும் என்கிற உறுதியோடு நண்பனின் தோளில் நம்பிக்கையோடு தட்டிக் கொடுத்தான்!

நல்லதே நடக்கும் என்று நாமும் நம்புவோம்!!




(இந்தக் கதையினை பின்னாட்களில் "நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!" என்கிற தலைப்பின் கீழே முழுக் கதையாக எழுதினேன். விக்ரமின் வாழ்க்கையில் பிறகு நடந்தது என்ன என்று அறிய விரும்பினால் அதையும் படித்துப் பாருங்கள்.)
 
Last edited:
Top Bottom